திருப்பூர்: அவினாசி அருகே தாயால் அளவுக்கு அதிகமாக சளி மருந்து கொடுக்கப்பட்டு மயக்க நிலையில் குப்பை கூடம் அருகே வீசப்பட்ட 5 வயது சிறுமி 10 நாட்கள் சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் உயிரிழந்தார். திருப்பூர் மாவட்டம் அவினாசி அடுத்த தண்டுகாரன்பாளையத்தில் கடந்த மாதம் 25ம் தேதி மயக்க நிலையில் குப்பைத்தொட்டி அருகே கிடந்த சிறுமியை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சி.சி.டி.வி பதிவின் அடிப்படையில் தண்டுக்காரன் பகுதியில் சுற்றித்திரிந்த பெண்ணை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியை சேர்ந்த 39 வயதான மருத்துவர் சைலஜா குமாரி என்பதும், சிறுமி அவருடைய குழந்தை என்பதும் தெரியவந்தது. கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த அவர், வேலை தேடி திருப்பூருக்கு தனது குழந்தையுடன் வந்துள்ளார். அப்போது அவினாசி அருகே மகள் வாந்தி எடுத்ததால் பாதி வழியில் இறங்கியுள்ளார். குடும்ப பிரச்சனை மற்றும் பண பிரச்சனையால் மகளை கொன்று தானும் தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். இதற்காக கையில் வைத்திருந்த சளிக்கான சிறப்பை குழந்தைக்கு முழுவதுமாக கொடுத்துள்ளார். இதையடுத்து, மயக்கமடைந்த சிறுமியை குப்பை தொட்டி அருகே போட்டுவிட்டு எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். தொடர்ந்து எங்கு செல்வது என்று தெரியாமல் தண்டுகாரன்பாளையம் பகுதி அருகே சுற்றி வந்தது சேயூர் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சைலஜாவை கைது செய்த போலீசார் கோவை மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுமியையும் மேல்சிகிச்சைக்காக கோவை மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மருத்துவர் சைலஜா மீதான கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….