வருசநாடு, ஜூலை 31: வருசநாடு இந்திராநகர் காமராஜர்புரத்தை சேர்ந்தவர் பாண்டி. இவரது தந்தை மணி அதே பகுதியைச் சேர்ந்த பால்ராஜிடம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வட்டிக்கு பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. அந்த பணத்தை திருப்பி தரும்படி பாண்டியிடம் பால்ராஜ் கேட்டார். ஆனால் பணம் கொடுத்ததற்கான ஆதாரத்தை தரும்படி பாண்டி அவரிடம் கேட்டார். இதனால் இவர்களுக்கு இடையை முன்விரோதம் ஏற்பட்டது.
இந்நிலையில் பாண்டியின் தந்தை கடந்த மாதம் இறந்துவிட்டார். 30ம் நாள் காரியத்திற்காக பாண்டி வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பால்ராஜ் எனக்கு பணம் தராமல் எப்படி வீட்டில் வேலை செய்யலாம் என அவதூறாக பேசி பாண்டி, அவரது தங்கை பாண்டியம்மாள், பாண்டியின் மனைவி பேச்சியமாள் ஆகியோரை தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரில் வருசநாடு போலீசார் பால்ராஜ் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.