போடி, ஜூலை 31: போடி குலாளர்பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் மணிகண்டன் (35). இவர், யோகா மற்றும் ஆயுர்வேத மெடிசன் டீலராக இருந்து வருகிறார். சம்பவத்தன்று மெடிசின்களை சப்ளை செய்துவிட்டு வீட்டிற்கு மணிகண்டன் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது, போடி போஸ் பஜார் பகுதியை சேர்ந்த அழகர்ராஜா மகன் லோகேஷ்குமார் (24) என்பவர் அவரை வழிமறித்து, கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
உடனே மணிகண்டன் சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். இதனை கண்ட லோகேஷ்குமார் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதுகுறித்து மணிகண்டன் போடி நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லோகேஷ்குமாரை தேடி வருகின்றனர்.