சென்னை: தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, மு.க.ஸ்டாலின் முதல் முறையாக கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிளில் சென்று உடற்பயிற்சியில் ஈடுபட்டார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாரத்தில் 3 நாட்கள் சைக்கிளில் சுமார் 20 முதல் 30 கிலோ மீட்டர் தூரம் காலையில் பயணம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். தமிழக, சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்தது. இதனால், மு.க.ஸ்டாலின் அப்போது ஒரு மாத காலமாக தமிழகம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். இதனால், சைக்கிள் பயிற்சி மேற்கொள்ளாமல் இருந்தார். இந்நிலையில், தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று கொண்டார்.இந்நிலையில், வழக்கம்போல் நேற்று காலை முட்டுக்காட்டில் இருந்து சைக்கிள் பயணத்தை தொடங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,கோவளம், திருவிடந்தை, வடநெம்மேலி, நெம்மேலி, புதிய கல்பாக்கம், சூளேரிக்காடு, பட்டிப்புலம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரத்துக்கு சைக்கிளில் வந்தார். அப்போது, முட்டுக்காட்டில் இருந்து மு.க.ஸ்டாலின் சைக்கிளில் மாமல்லபுரம் நோக்கி பயணித்து கொண்டிருந்தார். அப்போது, வழியில் பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களை பார்த்து சிரித்த முகத்துடன் கையசைத்தவாறு பயணித்தார். பதிலுக்கு பொதுமக்களும், கட்சி தொண்டர்களும் அவரை பார்த்து கையசைத்தனர். இதை பார்த்த, முதல்வர் மு.க.ஸ்டாலின் உற்சாகமடைந்து சிரித்த முகத்துடன் பயணித்தார். முதல்வரின் வாகனம் மாமல்லபுரம் தனியார் ஓட்டலில் இருந்து கோவளம் சாலையில் சென்னை நோக்கி திரும்பியபோது சாலையோரம் இரண்டு பேர் கையில் மனு வைத்து நின்றிருந்தனர். இதைப் பார்த்த முதல்வர் தனது வாகனத்தை நிறுத்த சொல்லி மனு வாங்கி படித்தார். அந்த மனுவில், வாசுதேவன் (40), கடந்த 2006ம் ஆண்டிலிருந்து 2012ம் வருடம் வரை மாமல்லபுரம் பேரூராட்சியில் தற்காலிக ஊழியராகவும், 2012ம் ஆண்டிலிருந்து தற்போது வரை ஒப்பந்த அடிப்படையில் கடந்த 15 வருடமாக தெரு மின் விளக்கு பணியாளராக வேலை செய்து வருகிறேன். மாவட்ட கலெக்டரிடமும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடமும் மனு கொடுத்தும் எந்த பயனும் இல்லை. எனவே, தன்னை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தார். அதேப்போல், வேலாயுதம் (53), என்பவர் அளித்த மனுவில், நான் நூலகத்துறையில் எம்.பில், முடித்துள்ளேன். பாலவாக்கத்தில் உள்ள ஊர்ப்புற நூலகத்தில், ஊர்ப்புற நூலகராக சிறப்பு காலமுறை ஊதியத்தில் கடந்த 8 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகிறேன். மாமல்லபுரத்தில் உள்ள சிற்ப கல்லூரியில் நூலகர் பதவி காலியாக உள்ளது. எனவே, அந்த காலி பணி இடத்தில் தன்னை நியமிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 பேரின் மனு மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக வாசுதேவன் மற்றும் வேலாயுதம் இருவருக்கும் உறுதி அளித்தார். சைக்களில் மாமல்லபுரம் சென்ற முதல்வர் ஸ்டாலின், இங்குள்ள தனியார் ஓட்டலில் சற்று நேரம் ஓய்வெடுத்தார். பின்னர், மீண்டும் சென்னைக்கு காரில் ஏறி புறப்பட்டார்….