Sunday, June 16, 2024
Home » தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் வலைகளை அறுத்து கடலில் வீசினர்: இலங்கை கடற்படை மீண்டும் அட்டகாசம்

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் வலைகளை அறுத்து கடலில் வீசினர்: இலங்கை கடற்படை மீண்டும் அட்டகாசம்

by kannappan

ராமேஸ்வரம்: பாக் ஜலசந்தி கடல் பகுதியில் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது, நேற்றிரவு இலங்கை கடற்படையினர் பாட்டில்கள், கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் 10 விசைப்படகுகளில் இருந்த வலைகளை பறித்து, அவற்றை அறுத்து கடலில் வீசி, மீனவர்களை விரட்டியடித்தனர். ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று காலை 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள், கடலுக்கு சென்றனர். நேற்று மாலை கச்சத்தீவு முதல் ஊர்க்காவல் துறை வரையிலான பாக் ஜலசந்தி கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 4 ரோந்துக் கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் திடீரென தமிழக மீனவர்கள் மீது கற்கள் மற்றும் பாட்டில்களை சரமாரியாக வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் மீனவர்கள் தங்களது படகுகளை திருப்பி, வேக வேகமாக ராமேஸ்வரம் கடல் பகுதியை நோக்கி வந்தனர். ஆனால் இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களின் படகுகளை தொடர்ந்து விரட்டி வந்தனர். தங்கள் ரோந்து கப்பல்களால், படகுகள் மீது மோதுவது போல இலங்கை கடற்படையினர் விரட்டி வந்ததால் மீனவர்கள் அச்சமடைந்தனர். மேலும் 10 விசைப்படகுகளை மறித்த இலங்கை கடற்படையினர், அந்த படகுகளில் இருந்த வலைகளை பறித்து, வெட்டி கடலில் வீசினர். இதனால் அச்சமடைந்த மற்ற படகுகளில் இருந்த மீனவர்கள், வேக வேகமாக ராமேஸ்வரம் கடல் பகுதிக்கு திரும்பினர். நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை இலங்கை கடற்படையினர், ரோந்து கப்பல்களில் கச்சத்தீவு முதல் ஊர்க்காவல்துறை வரையிலான பாக் ஜலசந்தி கடல் பகுதியில் சுற்றி சுற்றி வந்தனர்.இதனால் ராமேஸ்வரம் கடல் பகுதிக்கு வந்த மீனவர்கள், இரவு முழுவதும் அப்பகுதியில் மீன் பிடித்து விட்டு, இன்று காலை குறைந்த அளவு மீன்களுடன் கரை திரும்பினர். இலங்கை கடற்படையினரின் தாக்குதல் குறித்து கரை திரும்பிய மீனவர்கள், ‘‘மழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கடந்த வாரம் 4 நாட்கள், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. வானிலை இயல்புக்கு திரும்பிய பின்னர் மீண்டும் கடலுக்கு புறப்பட்ட போது, மீன்பாடு அதிகம் இருக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தோம். ஆனால் இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததால், குறைந்த அளவு மீன்களுடன் கரை திரும்பியுள்ளோம். இதனால் எங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. பாக் ஜலசந்தி கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் அச்சமின்றி மீன் பிடிக்க தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாக எடுக்க வேண்டும். இல்லையென்றால் மீனவர்கள் மீன்பிடித் தொழிலை கைவிட வேண்டிய நிலை ஏற்படும்’’ என்று வேதனை தெரிவித்தனர்….

You may also like

Leave a Comment

8 − eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi