மேட்டூர், ஏப். 2: தமிழகத்தில் வரும் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதே போல் கர்நாடகவிலும் தேர்தல் நடைபெறுகிறது. இதனையடுத்து வாக்காளர்களுக்கு பணம் பரிசு பொருள் கொண்டு செல்வதை தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான பாலாற்றில் கர்நாடக போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்திலிருந்து கர்நாடகா செல்லும் வாகனங்களிலும், கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர் தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.
இதே போல் தமிழக எல்லையான காரைக்காட்டில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியிலும், கொளத்தூர் சோதனை சாவடியிலும் பறக்கும் படையினர் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்கு பிறகு தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். தொப்பூர் அருகே மேச்சேரி பிரிவு சாலையிலும், தேர்தல் பறக்கும் படையினர் தணிக்கை செய்து வருகின்றனர். தர்மபுரி மாவட்ட எல்லையில் இருந்து சேலம் மாவட்ட எல்லையில் நுழையும் வாகனங்கள் தீவிர தணிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றன.