கோவை: ‘‘தமிழகத்தில் பா.ஜனதாவின் ஒரு வேட்பாளருக்கு ரூ.13 கோடி செலவு தொடர்பாக எதுவும் பேச விரும்பவில்லை’’ என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நழுவினார். பா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன், கோவை மாவட்ட கட்சி அலுவலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவுக்கு கோவையில் மிக அதிவேகமாக கொரோனா தொற்று பரவுகிறது. எனினும், கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தமிழக அரசுக்கு, முழு ஒத்துழைப்பு அளிப்போம். ஊரடங்கு முடிந்து, இயல்பு நிலைக்கு திரும்பும் போது அனைவருமே தடுப்பூசி போட்டுள்ளோம் என்ற நிலை வரவேண்டும். உலகிலேயே மிகவும் குறைவான விலையில் நம் நாட்டில் தடுப்பூசி உற்பத்தி செய்யப்பட்டு, இலவசமாக கொடுக்கப்படுகிறது. மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட குழு, மாநில அளவில் வழங்கப்படும் தடுப்பூசி குறித்து கண்காணித்து வருகிறது.சென்னை பத்ம சேஷாத்திரி பள்ளி பாலியல் சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்டவர்கள் மீது பாரம்பட்சம் இல்லாமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில், பாரதீய ஜனதா வேட்பாளர்களுக்கு தலா ரூ.13 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது என்ற ஆடியோ பரவல் விவகாரம் தொடர்பாக எதுவும் பேச விரும்பவில்லை. தேர்தல் ஆணையத்திடம் முழுமையாக கணக்கு சமர்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார். பேட்டியின் போது கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்….