தஞ்சாவூர், ஏப்.7: தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் 100% வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர் ஏற்படுத்தும் வகையில் ராட்சத பலூன் பறக்க விட்டுள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்கள் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களித்ததற்கு ஏதுவாக அவர்களின் இல்லங்களுக்கு சென்று தபால் வாக்கு பெறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அனைவரும் தவறாது 100% வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் ராட்சத பலூன் பறக்க விடப்பட்டுள்ளது.