தஞ்சாவூர்: தஞ்சாவூரிலிருந்து திருவள்ளூர் மாவட்டம் கொருக்குப்பேட்டைக்கு 1000 டன் நெல் அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சாவூர் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளையும் நெல் கொள்முதல் நிலையங்களில் வாங்கப்பட்டு சேமிக்கப்படுகிறது. பின்னர் இந்த நெல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு பொதுவினியோகத்திட்டத்தின் கீழ் அரிசி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்த நெல் மூட்டைகள் லாரிகள் மற்றும் சரக்கு ரெயில் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு வருகின்றன. இது தவிர தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும். அதன்படி நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சேமிப்பு கிடங்குகளில் இருந்து 1,000 டன் நெல் மூட்டைகள் ஏராளமான லாரிகளில் தஞ்சாவூர் ரயில் நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டன. பின்னர் நெல் மூட்டைகள் சரக்கு ரயிலின் 21 வேகன்களில் அரவைக்காக திருவள்ளூர் மாவட்டம் கொருக்குப்பேட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டது….