தஞ்சாவூர், ஜூன் 11: இந்து சமய அறநிலையத்துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், ஸ்ரீ ராமானுஜ தரிசன சபை ஆகியவை சார்பில் 89ம் ஆண்டு கருட சேவைப்பெருவிழா ஆழ்வார் மங்களாசாசனத்துடன் கடந்த 8ம்தேதி தொடங்கியது. தொடர்ந்து, 24 கருட சேவை விழா நேற்று நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, 15 பெருமாள் கோவில்களில் வெண்ணெய்த்தாழி பெருவிழா என்கிற நவநீத சேவை விழா நேற்று காலை நடைபெற்றது.
இதில், வெண்ணாற்றங்கரை நீலமேகப்பெருமாள், நரசிம்மப் பெருமாள், மணிகுன்றப் பெருமாள், கல்யாண வெங்கடேசப்பெருமாள், மேல வீதி நவநீத கிருஷ்ணன், எல்லையம்மன் கோயில் தெரு ஜனார்த்தனப்பெருமாள், கரந்தை யாதவக் கண்ணன், கீழ வீதி வரதராஜப் பெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்கடேசப் பெருமாள், பள்ளியக்ரஹாரம் கோதண்டராமசாமிப் பெருமாள், மகர்நோம்புசாவடி நவநீத கிருஷ்ணசாமி, பிரசன்ன வெங்கடேசப்பெருமாள், மேல அலங்கம் ரெங்கநாதப் பெருமாள், படித்துறை வெங்கடேசப் பெருமாள், கோட்டை பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆகிய கோவில்களிலிருந்து காலை புறப்பாடு நடைபெற்றது.
இதையடுத்து, அந்தந்த கோவில்களிலிருந்து கொடிமரத்து மூலைக்கு சென்றடைந்து, பின்னர், கீழவீதி, தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதிகளில் வலம் செல்லும் வைபவம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். இந்த விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடையாற்றியுடன் முடிவடைகிறது.