திருமலை: ஆந்திராவில் வரும் 13ம்தேதி மக்களவை, சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி கர்னூல் மாவட்டம் பண்யம் நகரில் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி சார்பில் நேற்று தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. இதில் சந்திரபாபுநாயுடு பேசியதாவது: கடந்த தேர்தலில் ராயலசீமாவில் மொத்தமுள்ள 52 இடங்களில் 49 இடங்களில் ஜெகன்மோகன் வெற்றி பெற்றார்.
ஆனால் இப்போது 52 இடங்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். ராயலசீமாவில் மூன்று இடங்களில் மட்டுமே நாம் வெற்றி பெற்றதாக ஜெகன்மோகன் கேலி செய்தார். இப்போது அவர் போட்டியிடும் புலிவேந்துலா சட்டமன்ற தொகுதியில் கூட ஜெகனுக்கு எதிர்காற்று வீசி வருவதால் விரக்திக்கு வந்துவிட்டார்.
என்னை வழக்கு எதுவும் இல்லாமல் நள்ளிரவில் வந்து கைது செய்தார்கள். ஏன் என்று கேட்டால் பதில் இல்லை. எனக்கே இந்த நிலை என்றால், சாமானியர்களின் நிலை என்ன? ஜெகன்மோகன் ஆட்சியில் மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவில்லை, ஆனால் ஜெகனின் வருமானம் அதிகரித்தது.
தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் மாதம் ₹1,500 வழங்குவோம். ‘தாய்க்கு வந்தனம்’ திட்டத்தின் கீழ் படிக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் ₹15,000 கொடுப்போம். அனைவரும் கல்வி கற்பது எங்கள் பொறுப்பு, 3 சமையல் எரிவாயு சிலிண்டர்களை இலவசமாக தருவோம். பெண்களுக்கு இலவச பேருந்து வசதி செய்து தருவோம். இவ்வாறு அவர் பேசினார்.