சேலம்: சேலம் அருகே தச்சு தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், வாலிபரும் மர்மமான முறையில் உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் கருப்பூர் அடுத்த கோட்டகவுண்டம்பட்டி வசந்த நகர் ஹவுசிங் போர்டைச் சேர்ந்தவர் ரவிவர்மா (27). தச்சு தொழிலாளியான இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகியும் குழந்தையில்லை. இதனிடையே கடந்த இரு நாட்களுக்கு முன்பு தான் குடிமாறுதலாகி வந்துள்ளனர். நேற்று கவிதா தீவிட்டிப்பட்டியில் உள்ள தனது தயார் வீட்டில் இருந்த நிலையில், ரவிவர்மா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சேலம் நெத்திமேடு கே.பி.கரடு பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்ராஜ்(36). மூட்டை தூக்கும் தொழிலாளியான இவரது மனைவி பரிமளா. இவர்களுக்கு 3 வயதில் மகள் உள்ளார். நேற்றிரவு குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த பிரகாஷ்ராஜின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் வந்து கொண்டிருந்தது. இதுகுறித்து பரிமளா கேட்டபோது, வரும் வழியில் கீழே விழுந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அவர், பிரகாஷ்ராஜை சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். அங்கு அனுமதித்த சிறிது நேரத்திலேயே பிரகாஷ்ராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.