கோவை: கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் கலா (40), டெய்லர். இவர் காந்திபுரம் 5வது தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் கலாவின் கழுத்தில் இருந்த நகையை பறிக்க முயன்றார். ஆனால், அவர் நகையை பறிக்கவிடாமல் பிடித்து கொண்டார். மேலும் திருடனை பிடிக்க உதவி கேட்டு கூச்சல் போட்டார். அக்கம்பக்கத்தினர் வருவதை பார்த்து நகையை அப்படியே விட்டு பைக்கில் தப்பிச்சென்றார். இது குறித்து கலா ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். அதில், கலா அணிந்திருந்தது கவரிங் நகை என தெரியவந்தது. அந்த வாலிபர் தங்கம் என நினைத்து பறிக்க முயன்றுள்ளார். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து நகை பறிக்க முயன்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.