தர்மபுரி, பிப்.28: அரூர் அருகே டி.அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் புரட்சிதாசன்(34), கூலித்தொழிலாளி. இவரது மனைவி பிரியங்கா(30). காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 1 மாதமாக புரட்சிதாசன் சரியாக வீட்டுக்கு வராததால், அவரது நடத்தையில் பிரியங்காவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் விசாரித்தபோது, பிரியங்காவின் தங்கையுடன் புரட்சிதாசன் தகாத உறவில் இருந்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, கணவனை பிரியங்கா தட்டிக்கேட்டதால் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து, நேற்று முன்தினம் தகாத உறவு காதலியுடன் புரட்சிதாசன் திடீரென மாயமானார். அவர்கள் 2 பேரையும் உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பிரியங்கா, கோட்டப்பட்டி போலீசில் புகாரளித்தார். அதில் எனது கணவருக்கும், தங்கைக்கும் தகாத உறவு இருந்து வந்த நிலையில், 2 பேரும் மாயமாகி விட்டனர். அவர்களை கண்டுபிடித்து தருமாறு கூறியுள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான 2 பேரையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.