அரூர், பிப்.28: அரூர் அடுத்த தீர்த்தமலையில் உள்ள வடிவாம்பிகை உடனமர் தீர்த்தகிரீஸ்வரர் மாசி தேரோட்டம் இப்பகுதியில் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டிற்காக மாசி தேரோட்டம் கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 1ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நடைபெற உள்ளது. அன்றைய தினம் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 50 ஆயிரம் பக்தர்கள் தேரோட்டத்தில் கலந்து கொள்வர். இதனையொட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது.
இதில் அரூர் டிஎஸ்பி, தாசில்தார்கள், இன்ஸ்பெக்டர்கள், தீயணைப்பு நிலைய அலுவலர், மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர், அறநிலைய துறை செயல் அலுவலர், சுகாதாரத்துறை, நெடுஞ்சாலை துறை என பல்வேறு துறையை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தேரோட்டத்தை எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி நடத்துவது குறித்து ஆலோசனைகளை ஆர்டிஓ வழங்கினார். இதில் டிஎஸ்பி ஜெகநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.