ஓசூர் : ஓசூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பிரகாஷ் எம்எல்ஏவை ஆதரித்து, நேற்றிரவு இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். பாகலூர், பேரிகை மற்றும் மத்திகிரி உள்ளிட்ட இடங்களில் திறந்த வேனில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது, அவர் பேசியதாவது:ஜெயலலிதாவை அதிமுகவினர் மறந்துவிட்டனர். அவருக்கு ₹100 கோடி செலவில் நினைவு மண்டபம் கட்டி, திறந்தார்கள். திறந்த சில நாட்களிலேயே, சசிகலா உள்ளே நுழைந்து விடுவார் என்பதால் மூடியும் விட்டார்கள். துணை முதல்வரை பார்த்து டயர் நக்கி என்று கூறியவர் அன்புமணி ராமதாஸ். ஊழல் பட்டியல் தயாரித்தும் கொடுத்தவர். ஆனால், அதையெல்லாம் மறந்து அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளார்.மாணவர்களின் டாக்டர் கனவை கலைத்தது பாஜ -அதிமுக அரசுகள் தான். நீட் தேர்வால் அனிதா, கீர்த்தனா, லட்சுமி மோனிஷா உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்தனர். திமுக வேட்பாளர் பிரகாஷ் எம்எல்ஏவை, 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அப்போது, மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவு துணை செயலாளர் விஜயகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், மாவட்ட துணை செயலாளர் சீனிவாசன் மற்றும் கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.இதையடுத்து, தளி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ராமச்சந்திரனை ஆதரித்து தேன்கனிக்கோட்டையில் உதயநிதி ஸ்டாலின் பிர சாரம் செய்தார். பிரகாஷ் எம்எல்ஏ உடனிருந்தார்….