ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் அருகே நாய்கள் கடித்து குதறி கொன்ற குரங்குக்கு மனிதரைப்போல் ஒப்பாரி வைத்து ஈம சடங்கு செய்து ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி அடக்கம் செய்த வினோத சம்பவம் அரங்கேறி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த திருமால் நகரில் கடந்த சில தினங்களாக குரங்கு ஒன்று சுற்றி திரிந்து வந்ததுள்ளது. இந்நிலையில் நேற்று அந்த குரங்குகை அப்பகுதியில் உள்ள நாய்கள் துரத்தி கடித்து குதறியது. பின்னர் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்த குரங்குகை மீட்டு பொதுமக்கள் தண்ணீர் ஊற்றி முதல் உதவி செய்து பின்னர் அப்பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றுள்ளனர்.
ஆனால் அதற்குள்ளாக குரங்கு உயிரிழந்தது. பின்னர் இதனை அறிந்த அப்பகுதி மக்கள் மனிதர்களை அடக்கம் செய்வது போல் மாலை அணிவித்து, பாடை கட்டி, ஒன்று கூடி ஒப்பாரி வைத்து அழுதனர். பின்னர் பறைமேளம் அடித்து சடங்குகள் செய்து பாடையில் குரங்குகை வைத்து ஊர்வலமாக சென்று திருமால் நகரில் உள்ள புற்றுக்கோயில் அருகே மனிதர்களுக்கு சடங்கு செய்வது போன்று ஈமச்சடங்கு செய்து புதைத்தனர். இறை தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வந்த குரங்கை அப்பகுதியில் உள்ள நாய்கள் கடித்து உயிரிழந்ததால் ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி வினோதமாக பாடைக்கட்டி, மேளம் அடித்து ஊர்வலமாக சென்று சுடுகாட்டில் அடக்கம் செய்த சம்பவம் வினோதத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.