ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை அருகே பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். மேலும், அவரிடமிருந்த 3 பைக்கை பறிமுதல் செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் மேம்பாலம் அருகே இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருப்பத்தூரில் இருந்து வாணியம்பாடி நோக்கி பைக்கில் வேகமாக வந்த வாலிபரை மடக்கி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளார். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், அவர் ஓட்டி வந்த பைக் திருட்டு பைக் எனவும், தான் திருடியதையும் ஒப்புக்கொண்டார். பின்னர், போலீசார் அவரை கைது செய்து ஜோலார்பேட்டை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் அவர் திருப்பத்தூர் அடுத்த கோனேரிகுப்பம் அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த சுகுமார் என்பவரின் மகன் பாலாஜி(21) என்பது தெரியவந்தது.
மேலும், இவர் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி ஊராட்சி கவுண்டப்பனூர், கந்திலி ஊராட்சி கந்திலி மலை, திருப்பத்தூர் ஊராட்சி ஜடையனூர் ஆகிய பகுதிகளில் 2 மொபைட், ஒரு ஹீரோ ஸ்ப்ளெண்டர் என 3 பைக்குகள் திருடியதாகவும் இதில் 2 பைக்குகள் ஏற்கனவே விற்றுவிட்டு தற்போது ஓட்டி வந்த பைக்கை வாணியம்பாடி பகுதிக்கு சென்று விற்பதற்காக வந்தபோது போலீசாரிடம் மாட்டிக்கொண்டதும் தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் ஏற்கனவே விற்கப்பட்ட 2 பைக்குகள், தற்போது திருடி வந்த ஒரு பைக் என 3 வாகனங்களை பறிமுதல் செய்தனர். பின்னர், பாலாஜியை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர் ஏற்கனவே வழிப்பறி வழக்கில் கைதாகி சிறை சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.