ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் நகராட்சியில் பல ஆண்டுகளாக 127 தூய்மை பணியாளர்களும் 44 டெங்கு ஒழிப்பு பணியாளர்களும் தினக்கூலி ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 30 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில், தனியார் ஒப்பந்ததாரர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, அலுவலகம் முன் துப்புரவு பணியாளர்கள், டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து 3வது நாளாக வேலை நிறுத்தம் செய்து, காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்படாததால், கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாகவும் துப்புரவு பணியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், இவர்கள் அமர்ந்திருந்த சாமியனா பந்தலை நகராட்சி ஊழியர்கள், பந்தல் உரிமையாளர்கள் ஆட்களை கொண்டு அகற்றி உள்ளனர். பந்தலை அகற்றியபோதும் வெயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.