வேலூர்: பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி வேலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ- ஜியோ சங்கத்தினர் 250 பேரை போலீசார் கைது செய்தனர். வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே ஜாக்டோ- ஜியோ சார்பில் மறியல் போராட்டம் நேற்று நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஜோஷி, ஜெயகாந்தன் தலைமை தாங்கினர். மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் சீனிவாசன், ஜி.சீனிவாசன், ஜனார்த்தனன், சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட உயர்மட்டக்குழு உறுப்பினர் ஜெயக்குமார் வரவேற்றார். இதில், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வரவேண்டும். காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பினை வழங்க வேண்டும். அரசின் பல்வேறு துறைகளில் 30 சதவீதத்திற்கும் மேலாக உள்ள 6 லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். 2003 முதல் 2004 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களின் பணிக்காலத்தை பணிவரைமுறைப்படுத்தி ஊதியம் வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.