சோழவந்தான்,ஜன.29: சோழவந்தான் அருகே திருவாலவாயநல்லூரில் ஜி.ஹெச்.சி.எல் பவுண்டேசன் மற்றும் பெட்கிராட் சுயதொழில் பயிற்சி நிறுவனம் இணைந்து கிராமப்புற பெண்களுக்கு சுயதொழிலுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பெட்கிராட் நிர்வாக இயக்குனர் சுப்புராம் தலைமை வகித்தார். தலைவர் கிருஷ்ணவேணி, பொருளாளர் சாராள் ரூபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் அங்குச்சாமி வரவேற்றார்.
ஜி.ஹெச்.சி.எல்.அலுவலர் சுஜின்” கிராமப்புற பெண்கள் தொழில் பயிற்சி பெற்று, சுயதொழில் துவங்கி, விற்பனை செய்து வாழ்வாதாரத்தில் முன்னேறும் வழி முறைகள்\” குறித்து எடுத்துரைத்தார். இதையடுத்து ஊராட்சி மன்றத் தலைவர் சகுபர் சாதிக், ஆரி ஒர்க், எம்ப்ராய்டரி உள்ளிட்டவைகளுக்கான தொழில் உபகரணங்களை பெண்களுக்கு வழங்கி வாழ்த்தினார்.பின்னர் இதற்கான தொழிற் பயிற்சிகளை பெண்களுக்கு பயிற்சியாளர் அகல்யா பாய் செயல்முறை விளக்கத்துடன் பயிற்றுவித்தார். இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மாலிக்,செயலர் வேலன், வார்டு உறுப்பினர் மும்தாஜ் பேகம், பெட்கிராட் அலுவலர் கதிரவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.