Friday, May 10, 2024
Home » இரவு நேரங்களில் அவலம் அரசு பள்ளி வளாகத்தை பாராக மாற்றும் நபர்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

இரவு நேரங்களில் அவலம் அரசு பள்ளி வளாகத்தை பாராக மாற்றும் நபர்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

by Ranjith

 

பரமக்குடி, ஜன. 29: பரமக்குடி சேதுபதி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தை இரவு நேரங்களில் மது பிரியர்கள் பலரும் பாராக மாற்றி வருகின்றனர். இப்பிரச்னையில் போலீசார் மற்றும் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். பரமக்குடி ஒட்டப்பாலம் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த சேதுபதி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் பலரும் அரசு துறையில் அதிகாரிகளாக உள்ளனர்.

பரமக்குடியில் தற்போது தனியார் பள்ளிகள் அதிகரித்துள்ளதால், இப்பள்ளியில் போதிய அளவு மாணவர் சேர்க்கை இல்லாமல் உள்ளது. இதனை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை மாவட்ட கல்வி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே இப்பள்ளியைச் சுற்றிலும் சுவர் அமைக்கப்பட்டாலும், இரவு நேர காவலர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் பள்ளி வளாகம் மது பிரியர்களின் பாராக மாறி வருகிறது. அவர்கள் குடித்துவிட்டு மது பாட்டில், கப் மற்றும் தண்ணீர் கேன்களை அங்கேயே போட்டுவிட்டு செல்கின்றனர்.

இதன்படி விளையாட்டு மைதானம் மற்றும் கட்டிடங்களில் ஆங்காங்கே கிடக்கும் மது பாட்டில்கள் மாணவர்களின் மனதை பெரிதும் பாதிக்கிறது. இப்பள்ளி வளாகத்திலேயே, மாவட்ட கல்வி அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. அப்படி இருந்தும், இப்பிரச்னையில் அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தவில்லை என்பது பெற்றோரின் கருத்தாக உள்ளது. எனவே கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இப்பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும் இரவு நேரத்தில் பள்ளிக்கு காவலர் நியமிக்க வேண்டும். இதன்வாயிலாக இதுபோன்ற நடவடிக்கைகளை தடுக்கலாம் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர் கூறுகின்றனர்.

You may also like

Leave a Comment

one × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi