சோமனூர், மார்ச் 6: கருமத்தம்பட்டி நகராட்சியில் திமுக சார்பில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. நகரச் செயலாளர் நித்திய மனோகரன் தலைமை வகித்து பேசினார். வர்த்தக அணி துணை அமைப்பாளர் சமங்காடு சண்முகம் வரவேற்றார். தலைமை கழக பேச்சாளர் பவானி கண்ணன், திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் பற்றி விளக்கி பேசினார்.
தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் பேசுகையில், ‘‘தமிழ்நாட்டுக்கு வரும்போது எல்லாம் மோடி சுட்ட வடை, மக்கள் மத்தியில் எடுப்படாது. இந்தியாவுக்கு எந்த வளர்ச்சியும் தராத மாடு சுட்ட வடை எந்த பயனும் இல்லை. மோடி சொன்னதை இதுவரை எதுவுமே நிறைவேற்றாதவர். பெண்களுக்கு 15 லட்சம் தருவதாக கூறினார். கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறினார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை என்ன ஆச்சு? இதெல்லாம்மோடி சுட்ட வடைதான்.
தமிழகம் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க காரணமாக தமிழகத்தில் முன்னேற்றத்திற்காகவே ஓய்வின்றி உழைக்கும் தமிழக முதலமைச்சர் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார். மக்களின் தேவைகளை நலத்திட்டங்கள் மூலமாக உடனுக்குடன் நிறைவேற்றி வருபவர் நமது முதல்வர்’’ என்றார். இந்தக் கூட்டத்தில் திமுக சூலூர் ஒன்றிய, நகர செயலாளர், மாவட்ட நிர்வாகிகள் பேரூராட்சி கழக செயலாளர் மகளிர் அணி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.