குடியாத்தம், மார்ச் 27: குடியாத்தம் நகரில் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. குடியாத்தம் நகராட்சி 24வது வார்டு வேதாந்த நகரில் தனியார் செல்போன் டவர் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேபோல், கடந்த வாரம் நடந்த பணியின்போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் டவர் அமைக்கும் பணி தற்காலிகமாக கைவிடப்பட்டது.தொடர்ந்து, நேற்று மீண்டும் செல்போன் டவர் அமைக்கும் பணி நடந்ததை அறிந்த பொதுமக்கள் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், செல்போன் டவர் அமைப்பவர்களிடம், இப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் பணிகள் நடைபெற கூடாது என தெரிவித்தனர். ஆனாலும், டவர் அமைக்கும் பணி தொடர்ந்து நடந்தது. இதை கண்டித்து 100க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு பந்தல் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, டிஎஸ்பி ராமமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது டிஎஸ்பி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதிளித்ததும் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்….