பாட்டியாலா: பாட்டியாலாவில் பாஜக வேட்பாளர் பிரனீத் கவுரின் பிரசாரத்தின் போது ஏற்பட்ட மோதலில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார். பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கின் மனைவி பிரனீத் கவுர், சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். அவர் பாட்டியாலா தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். தேர்தல் பிரசாரத்துக்காக பிரனீத் கவுர் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் தொகுதிக்குள் சென்றனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் அவர்களை தடுத்து நிறுத்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது ஏற்பட்ட மோதலின் போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் இருவர் காயமடைந்தனர். மேலும் அந்த மோதலில் சுரிந்தர்பால் சிங் என்ற விவசாயி இறந்ததாக கூறப்படுகிறது. தேர்தல் பிரசாரத்தின் போது தகராறு ஏற்பட்டதாகவும், பாஜகவினர் சுரிந்தர்பால் சிங்கை தள்ளிவிட்டதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டினர். இவ்விவகாரம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். பாஜகவினர் தள்ளிவிட்டதால் விவசாயி இறந்ததாக கூறப்படுவதால் பஞ்சப்பில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.