மீனம்பாக்கம், பிப்.19: சென்னையில் இருந்து அபுதாபி செல்லும் ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் விமானம் ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று அதிகாலை 5 மணிக்கு, அபுதாபிக்கு புறப்பட்டுச் செல்ல வேண்டும். அந்த விமானத்தில் சென்னையில் இருந்து அபுதாபிக்கு 164 செல்ல பயணிகள் இருந்தனர். பயணிகள் அனைவரும் அனைத்து சோதனைகளும் முடித்துவிட்டு, விமானத்தில் ஏறி அமர்ந்து விட்டனர்.
தொடர்ந்து விமானம் ஓடுபாதையில் ஓடத் தொடங்கியது. அப்போது விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்து, விமானத்தை அவசரமாக ஓடுபாதையிலேயே நிறுத்தினார். அதோடு சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் கொடுத்தார். இதையடுத்து விமான நிலையத்தின் இழுவை வாகனம் வரவழைக்கப்பட்டு, அந்த பழுதடைந்த ஏர் அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம், புறப்பட்ட இடத்திற்கு இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.
பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டு ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர். விமானத்தில் சிறிய இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது சரி செய்யப்பட்டு, தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவித்தனர்.ஆனால் இந்த விமானம் நேற்று பிற்பகல் வரை சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படவில்லை. விமானத்தில் ஏற்பட்டுள்ள இயந்திரக் கோளாறு சரி செய்யப்பட முடியாததால், விமானம் ரத்து செய்யப்படுவதாகவும், பயணிகள் அனைவரும் சென்னை நகரில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஆனால் பயணிகள் எங்களை பல மணி நேரம் காக்க வைத்து விட்டு இப்போது திடீரென்று விமானம் ரத்து என்று கூறுகிறீர்களே என்று கேட்டு விமான நிறுவன அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விமான நிலைய அதிகாரிகள் பாதுகாப்பு அதிகாரிகள் பயணிகளை சமாதானம் செய்தனர். விமானம் பழுதுபார்க்கப்பட்டு, இன்று அதிகாலை சென்னையில் இருந்து அபுதாபி புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் இருந்து அபுதாபி செல்ல வேண்டிய பயணிகள் 164 பயணிகள் சென்னையில் தவித்துக் கொண்டு இருக்கின்றனர்.