பாடாலூர்: ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் சுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் பிரசித்தி பெற்ற காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் தைப்பூச திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு தைப்பூச திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. மேலும் விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் காலை, இரவு ஆகிய வேளையில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதியுலா நடைபெற்று வருகிறது. நேற்று கோயிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை 10 மணிக்கு மூலவர் ஏகாம்பரேஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடு நடந்தது. இரவு 8.30 மணியளவில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்த உற்சவர் சோமாஸ்கந்தர், பார்வதி, காமாட்சி அம்மன் ஆகிய தெய்வங்களுக்கு திருக்கல்யாண உற்சவம் நடத்தப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.