Tuesday, May 28, 2024
Home » செங்கோட்டை அருகே மேக்கரையில் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 25 செயற்கை அருவிகள் இடித்து அகற்றம்

செங்கோட்டை அருகே மேக்கரையில் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 25 செயற்கை அருவிகள் இடித்து அகற்றம்

by kannappan

செங்கோட்டை: செங்கோட்டை அருகே மேக்கரையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இருந்து வரும் நீரோடைகளை ஆக்கிரமித்து  கட்டப்பட்ட தடுப்பணைகளை இடித்து அகற்றும் பணி தீவிரமாக நடந்தது. இதுவரை 25 செயற்கை அருவிகள் இடித்து அகற்றப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம், செங்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட மேக்கரை பகுதியில் உள்ள வனப்பகுதிகளிலிருந்து ஏராளமான நீரோடைகள் பாய்ந்து அடவிநயினார் அணை மற்றும் பண்பொழி, இலத்தூர், சீவநல்லூர், கரிசல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர்நிலைகளுக்கும், அனுமன் நதிக்கும்  சென்று அந்த நீர் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மேக்கரை பகுதியில் நீர் வழித்தடங்களை மறித்து சில தனிநபர்கள் அணை போல் அமைத்து அதை செயற்ைக நீர்வீழ்ச்சிகளாக உருவாக்கி சுற்றிலும் வேலிகள் அமைத்து அதன் அருகே தங்கும் விடுதிகள் அமைத்து அருவியில் குளிக்க ஒரு கணிசமான தொகையையும் சுற்றுலா பயணிகளிடம் வசூல் செய்து வந்தனர். இதனால் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் தண்ணீரில் சோப்பு உள்ளிட்ட கழிவுகள் கலந்து விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும், இங்கு கட்டப்பட்டுள்ள சொகுசு விடுதிகளில் தங்கும் சுற்றுலா பயணிகளில் பலர் மது பாட்டில்களை உடைத்து போடுவதால் அது வன விலங்குகளையும், விவசாயிகள் கால்களையும் பதம் பார்ப்பதாகவும் மாவட்ட கலெக்டரிடம் விவசாயிகள், குறைதீர்ப்பு நாளன்று புகார் அளித்தனர். இதனைத்தொடர்ந்து தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ், ஆர்டிஓ கங்காதேவி தலைமையில் ஒரு குழுவை அனுப்பி இது குறித்து ஆய்வு  செய்தார்.  மதுரை திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மேக்கரை கிராமத்தில் நீர்வழித்தடங்களை ஆக்கிரமித்து சுமார் 33 செயற்கை அருவிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக இப்பகுதி விவசாயிகள் தெரிவித்த நிலையில், இதில் தற்போது வரை 25 செயற்கை அருவிகள் மாவட்ட கலெக்டரின் அதிரடி உத்தரவால் இடித்து அகற்றப்பட்டுள்ளன. சில நாட்களுக்கு முன் செயற்கை அருவிகளை இடித்து அகற்றும் பணி தொடங்கிய நிலையில் பல முக்கிய பிரமுகர்கள் எதிர்ப்பால் பின்னடைவு ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் இப்பணிகள் துவங்கிய நிலையில் இதுவரை 25 அருவிகள் இடித்து அகற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள செயற்கை அருவிகளையும் அகற்றும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. …

You may also like

Leave a Comment

1 × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi