கரூர், மே 4: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட செங்குந்தபுரம் செல்லும் சாலையில் கனரக வாகன நிறுத்தம் காரணமாக கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் ஜவுளி, பஸ்பாடி, கொசுவலை போன்ற முக்கிய மூன்று தொழில்களை கொண்ட மாவட்டமாக உள்ளது. இதில், ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள், காமராஜபுரம், ராமகிருஷ்ணபுரம், செங்குந்தபுரம் போன்ற பகுதிகளில் அதிகளவு உள்ளன. இதன் காரணமாக வாகன போக்குவரத்தும் அதிகளவு இந்த சாலையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த சாலையில் சரக்கு போன்ற பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் உட்பட பெரும்பாலான வாகனங்கள் இந்த சாலையோரம் நீண்ட நேரம் நிறுத்தப்படுவதால் மற்ற வாகனங்கள் எளிதாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருவதோடு, கடும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் இந்த பகுதியில் பலமுறை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு போக்குவரத்து நெருக்கடி ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.