செங்கல்பட்டு, மார்ச் 21: செங்கல்பட்டில் நாடாளுமன்ற தேர்தல் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்திய தேர்தல் ஆணையத்தால் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. இந்த பேரணியை, ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அலுவலரும், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டருமான அருண்ராஜ் தலைமை தாங்கி தேர்தல் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணியில் பங்கேற்ற மகளிர் சுய உதவிக் குழுவினர், “வாக்களிப்பதில் பெருமை கொள்வோம், இந்திய ஜனநாயகத்தில் பங்கு பெறுவோம்” என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்றனர்.
இதனையடுத்து, இந்திய தேர்தல் ஆணையத்தால் பாராளுமன்ற தேர்தலில், பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். முன்னதாக பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மகளிர் சுய உதவிக் குழுக்கள் சார்பாக 100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியத்தை வண்ணக் கோலமாக வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மகளிர் திட்ட இயக்குநர் மணி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அறிவுடைநம்பி, மாவட்ட கலெக்டரினம் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சுப்பிரமணியன், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.