Wednesday, May 22, 2024
Home » ‘‘சுகமான, சுமையில்லாத, விளையாட்டுடன் கூடிய கல்விக் கொள்கை தேவை: ராமதாஸ் கோரிக்கை

‘‘சுகமான, சுமையில்லாத, விளையாட்டுடன் கூடிய கல்விக் கொள்கை தேவை: ராமதாஸ் கோரிக்கை

by kannappan

சென்னை: சுகமான, சுமையில்லாத, விளையாட்டுடன் கூடிய தரமான கல்வியை அனைவருக்கும் வழங்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தனியார் பள்ளி மாணவர்கள் 10 கிலோவுக்கு கூடுதலாக புத்தகப் பைகளை சுமந்து செல்ல வேண்டியுள்ளதால் அதிக எடை புத்தகப் பைகளை சுமப்பதால் பள்ளிக்கு சென்று வந்தபின் உடல்வலியால் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். புதிய மாநிலக் கல்வி கொள்கை தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியாவில் புதிது புதிதாக கல்விக் கொள்கைகள் வகுக்கப்பட்டு வரும் போதிலும், குழந்தைகளை கொடுமைப்படுத்தாத கல்வி முறை இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. பள்ளிக்குச் செல்வதை தண்டனையாக கருதாத சூழலை குழந்தைகளுக்கு ஏற்படுத்தித் தருவது தான் இன்றைய முதன்மைத் தேவையாகும். அதை நோக்கிய நடவடிக்கைகள் இன்னும் எடுக்கப்படாதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.திண்டிவனமாக இருந்தாலும், சென்னையாக இருந்தாலும், நான் பயணிக்கும் வேறு கிராமங்களாக இருந்தாலும் என்னை வருந்த வைக்கும் விஷயம் பள்ளிக் குழந்தைகள் தங்களின் புத்தகப் பைகளை சுமக்க முடியாமல், சுமை தூக்கும் தொழிலாளர்களைப் போல சுமந்து செல்வது தான். அவ்வாறு அதிக எடை கொண்ட புத்தகப் பைகளை சுமந்து செல்லும் அனைத்துக் குழந்தைகளும் தனியார் பள்ளிகளில் படிப்பவர்கள் தான். அரசு பள்ளிகளில் புத்தகச் சுமை அவ்வளவாக இல்லை. ஆனால், தனியார் பள்ளிகளின் மாணவச் செல்வங்கள் 10 கிலோவுக்கும் கூடுதலான எடை கொண்ட புத்தகப் பைகளைத் தான் சுமந்து செல்ல வேண்டியிருக்கிறது. இது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். அதிக எடை கொண்ட புத்தகப் பைகளை விட கொடுமை, அவற்றை சுமந்து கொண்டு 3 மாடிகள் அல்லது 4 மாடிகள் ஏற வேண்டியிருப்பது ஆகும். மலர்களைப் போல கையாளப்பட வேண்டிய மழலைகள், இவ்வளவு அதிக எடை கொண்ட புத்தகப் பைகளை சுமந்து செல்ல வேண்டியிருப்பதால், பள்ளிக்கு சென்று வந்த பின்னர் முதுகு வலி, உடல் வலி ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். அதனால் அவர்களால் பள்ளிகளில் நடத்தப்பட்ட பாடங்களை படிப்பதோ, வீட்டுப்பாடம் செய்வதோ சாத்தியமாவதில்லை.பள்ளிக்குழந்தைகள் பலரை நானே அழைத்து விசாரித்த போது, அவர்கள் இதை தண்டனையாக கருதுகின்றனர் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. அதிக பாடப்புத்தகங்களை படிக்கச் சொல்லும் பள்ளிகள் தான் சிறந்த பள்ளிகள் என்ற மாயைக்கு தமிழ்ச் சமுதாயம் அடிமையானது தான் மழலைகள் அனுபவிக்கும் அனைத்து கொடுமைகளுக்கும் காரணம் ஆகும். இந்த மாயை தகர்த்தெரியப்பட வேண்டும்.தமிழ்நாட்டின் தேவைக்கும், பண்பாட்டுக்கும் ஏற்ற வகையில் தனித்துவமான மாநில கல்விக் கொள்கையை வகுக்க வல்லுனர் குழுவை தமிழக அரசு அமைத்திருக்கிறது. அக்குழு அடுத்த சில வாரங்களில் அதன் ஆய்வறிக்கையை அரசிடம் தாக்கல் செய்யவிருக்கிறது. தமிழ்நாட்டில் உருவாக்கப்படவுள்ள மாநிலக் கல்விக் கொள்கையின் மையக்கரு, ‘‘சுகமான, சுமையில்லாத, விளையாட்டுடன் கூடிய தரமான கல்வியை அனைவருக்கும் இலவசமாக வழங்க வேண்டும்’’ என்பதாகத் தான் இருக்க வேண்டும்.மாணவர்கள் கிட்டத்தட்ட தங்களுக்கு இணையான எடை கொண்ட புத்தகப் பைகளை சுமந்து சொல்லும் கொடுமைக்கு உடனடியாக முடிவு கட்டப்பட வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் ஒரே மாதிரியான, ஒரே எண்ணிக்கையிலான பாட நூல்கள் மட்டும் தான் கற்பிக்கப்பட வேண்டும். மாணவர்கள் தங்களின் பாடநூல்களை பள்ளியிலேயே வைத்து செல்லவும், வகுப்பில் நடத்தப்படும் பாடங்களை ஏடுகளில் குறிப்பெடுத்துச் சென்று அதைக் கொண்டு படிக்கும் நிலை உருவாக்கப்பட வேண்டும். அது தான் மாணவர்கள் பாடங்களை புரிந்து கொண்டு படிப்பதற்கு வகை செய்யும். இத்தகைய கல்வி முறை தான் மனப்பாடம் செய்யும் வழக்கத்தை ஒழித்து, சிந்திக்கும் திறனை அதிகரிக்கச் செய்யும். அதனால் தான் சுகமான, சுமையில்லாத, விளையாட்டுடன் கூடிய தரமான கல்வியை அனைவருக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என்பதை பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. அதேபோல், பள்ளிக்கூடங்களில் ஒன்று முதல் ஐந்து வரையிலான வகுப்புகள் தரைத்தளத்திலேயே இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும். தொழிற்கல்வியும், விளையாட்டுக் கல்வியும் கட்டாயமாக்கப்பட வேண்டும். வாரத்திற்கு இரு பாடவேளைகள் நீதிபோதனை வகுப்புகளும் கட்டாயமாக்கப்பட வேண்டும். இத்தகைய சீர்திருத்தங்களின் மூலம் பள்ளிக்கு செல்வதை மழலைகளுக்கு இனிமையான அனுபவமாக மாற்றுவதற்கு மாநிலக் கல்விக் கொள்கை வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.’ இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது….

You may also like

Leave a Comment

5 × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi