மதுரை, பிப். 13: நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறைகளில் உள்ளவர்களுக்கு விளையாட்டு பயிற்சி அளிக்கும் ‘பரிவர்த்தன்’ என்ற திட்டம், இந்தியன் ஆயில் நிறுவனத்தால் கடந்த 2021ல் துவங்கப்பட்டது.இதன்படி மாநில சிறைத்துறையுடன் இணைந்து கைதிகளின் உடல் மற்றும் மன நலனை மேம்படுத்தும் வகையில் பூப்பந்து, கைப்பந்து, செஸ், டென்னிஸ், கேரம் ஆகியவற்றை சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் வழங்கி வருகிறது. இதன்படி நடக்கும் நான்கு வார பயிற்சியில் சிறைவாசிகளுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் வழங்குகிறது.
பயிற்சிக்கு பின் பல்வேறு விளையாட்டு போட்டிகளிலும் இவர்கள் பங்கு பெறுவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது. மதுரை மத்திய சிறையில் நேற்று இத்திட்டம் துவக்க விழா நடைபெற்றது. இதில் மதுரை சரக சிறைத்துறை டிஐஜி பழனி, மத்திய சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தமிழக பிரிவு தலைவர் அண்ணாதுரை, மதுரை மண்டல மேலாளர் மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்தியா காணொலி காட்சி வாயிலாக பயிற்சி திட்டத்தை துவக்கி வைத்தார்.