சேலம், ஏப்.6: சேலம் மத்திய சிறையில் இட்லி சாப்பிட்ட 13 கைதிகளுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால் சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.சேலம் மத்திய சிறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கடந்த ஒராண்டிற்கு முன்பு வரை, காலையில் பொங்கல், அல்லது அரிசி கஞ்சி வழங்கப்பட்டு வந்தது. தற்போது விதவிதமான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. காலையில் இட்லி, தக்காளி சாப்பாடு என மாற்றி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று காலை, கைதிகளுக்கு 4 இட்லியுடன் சாம்பார் வழங்கப்பட்டது. அதனை 1089 கைதிகள் சாப்பிட்ட நிலையில், 5 மற்றும் 6வது பிளாக்கில் அடைக்கபபட்டுள்ள கஞ்சா வழக்கு கைதிகள் 13 பேருக்கு மட்டும் வயிற்று வலி ஏற்பட்டது. பகல் 12 மணி அளவில் அவர்கள் வயிறு வலிப்பதாக அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.உடனடியாக அவர்கள் சிறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவர்களுக்கு குளுகோஸ் ஏற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து சிறை கண்காணிப்பாளர் வினோத் மற்றும், அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இட்லியில் புட்பாய்சன் ஏற்பட்டு விட்டதா? என அனைத்து கைதிகளிடம் விசாரித்தனர். ஆனால் யாருக்கும் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை.குறிப்பாக 13 பேருக்கு மட்டும், இட்லி சாப்பிட்டதில் பிரச்னை ஏற்பட்டது எப்படி? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.