விழுப்புரம், நவ. 17: மரக்காணம் அருகே சிறுமி பலாத்கார வழக்கில் கூலி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஆட்சிகாடு பகுதியைச் சேர்ந்த ராஜகிளி(42). கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2018 அக்டோபர் 20ம் தேதி மண்டவாய் புதுகுப்பம் பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி அவரது பெற்றோருடன் வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரை தூக்கி சென்று ராஐகிளி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து மரக்காணம் காவல் நிலையத்தில் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் போக்சோ உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ராஜகிளியை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி ஹர்மீஸ் நேற்று தீர்ப்பு கூறினார். அதில் குற்றம் சாட்டப்பட்ட ராஜகிளிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென அரசுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து சிறைதண்டனை விதிக்கப்பட்ட ராஜகிளி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறையில் அடைக்கப்பட்டார்.