வேலூர், டிச.25:வேலூர் புரத்தில் சக்தி அம்மா ஜெயந்தி விழாவையொட்டி நடந்த ரத்ததான முகாமினை அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் நேற்று தொடங்கி வைத்தார். இதில் 390பேர் ரத்ததானம் செய்தனர்.
வேலூர் புரம் நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், நாராயணி பீடம், நாராயணி பக்தசபா சார்பில் சக்தி அம்மாவின் 48வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறப்பு ரத்ததான முகாம் நேற்று காலை தொடங்கியது. சிறப்பு விருந்தினராக அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்தார். நாராயணி மருத்துவமனை இயக்குனர் பாலாஜி, புரம் இயக்குனர் சுரேஷ்பாபு, அறங்காவலர் சவுந்தர்ராஜன், நாராயணி பீடம் மேலாளர் சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் இளைஞர்கள், பெண்கள் உட்பட பலர் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர். முகாம் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரையில் நடந்தது. முகாமில் மொத்தம் 390 பேர் ஆர்வத்துடன் பங்கேற்று ரத்த தானம் செய்தனர். தானமாக பெறப்பட்ட ரத்தம் நோயாளிகளின் சிகிச்சைக்காக இலவசமாக வழங்கப்படும் என்று நாராயணி பீடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.