விழுப்புரம், மே 10: தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் எஸ்பி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முன்னாள் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த முன்னாள் செங்கல்பட்டு எஸ்பி ஆகியோர் மீது விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 68 அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நிறைவு பெற்று வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதனிடையே நேற்று நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது முன்னாள் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரிடம் சிறப்பு டிஜிபி தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகி குறுக்கு விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் ஆஜரானார். அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹேமராஜன் செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் நடந்த சம்பவங்கள் அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளை காண்பித்து நீதிபதி முன்பு விளக்கி கூறினர். தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி வரும் 18ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.