தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் ஏஞ்சல் பிரியா (22). இவர், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் சென்றார். காப்பர் டி அணிந்திருப்பதால் ஏற்பட்ட வலியின் காரணமாக அவர் சிகிச்சைக்கு சென்றுள்ளார். அங்கு இவருக்கு ரேடியாலஜி மருத்துவர் கோகுல் சிகிச்சை அளித்தார். அப்போது, அந்த பெண்ணிடம் தவறாக நடந்ததாக அந்த பெண் மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், மருத்துவமனை முதல்வரிடம் புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து விசாரணை நடத்தியபோது, டாக்டர் கோகுல் முதுநிலை மருத்துவ படிப்பு படித்து வருவது தெரிய வந்தது. பின்னர், மருத்துவ கல்வி இயக்குனர் சங்குமணி விசாரணை நடத்தி மருத்துவர் கோகுலை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும் இதுகுறித்து ஏஞ்சல் பிரியா வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மருத்துவர் கோகுல் சிகிச்சை அளிக்கும் போது தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என புகார் அளித்துள்ளார். இதுகுறித்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.