சென்னை: வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் பைக் ரேசில் ஈடுபட்ட 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். ஆவடி காவல் ஆணையரக பகுதியில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில், பைக் ரேசில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க, ஆவடி காவல் ஆணையர் சங்கர், போக்குவரத்து புலனாய்வு பிரிவில் குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், அருமந்தை சோழவரம் அருகே கடந்த சில நாட்களாக வாலிபர்கள் சிலர் பைக் ரேசில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் நேற்று மேற்கண்ட பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 3 வாலிபர்கள் பைக் ரேசில் ஈடுபடுவது தெரிந்தது. போலீசாரை பார்த்ததும், தப்பியோட முயன்ற அவர்களை விரட்டி பிடித்தனர்.
விசாரணையில், செங்குன்றம் நாரவாரிகுப்பம் பகுதியை சேர்ந்த ரமேஷ்பாபு (19), புழல் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த லெனின் ஜான்சன் (எ) பில்லர் (18), திருவள்ளூர் வாயுதிகைமேடு பகுதியை சேர்ந்த தினேஷ் (21) ஆகியோர் என்பது தெரிந்தது. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களிடமிருந்து பைக் ரேசிற்கு பயன்படுத்திய பைக்குகள், ஓட்டுநர் உரிமம் மற்றும் வீடியோ எடுக்க பயன்படுத்திய செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், மூவரையும் கைது செய்து, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.