சாத்தூர், நவ. 26: சாத்தூரில் சாலையில் தேங்கியுள்ள மழைநீரால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். சாத்தூர் அரசு பேருந்து பணிமனை அருகே தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான 400க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், அரசு மருத்துவ மனை ஆகியவை உள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு குடியிருப்பு புதிதாக உருவான போது குடியிருப்பு பகுதிகளில் சாலைகள் அமைத்துள்ளனர்.
அந்த சாலையின் மேல் வாகனங்கள் சென்றதால் சாலை பல இடங்களில் பழுதடைந்து மேடும் பள்ளமாக இருந்து வருகிறது. சாத்தூர் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்ததால் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் சாலை முழுவதும் சகதியாக மறியுள்ளது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமலும், பொதுமக்களும் தெருக்களில் நடந்து செல்ல பெரிதும் அவதிபட்டு வருகின்றனர்.
மேலும் தேங்கியுள்ள மழைநீரில் இருந்து கொசு உருவாகும் சூழல் உள்ளதால், உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தினர் விரைந்து இப்பகுதியில் புதிதாக சாலை அமைத்து கொடுக்க வேண்டும் வாகனஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.