சாத்தான்குளம்:சாத்தான்குளம்-இட்டமொழி சாலை ஞானியார்குடியிருப்பு விலக்கில் சாலையோரம் நேற்று காலை சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கிடந்தது. அவரின் உடலில் காயம் காணப்பட்டது. லுங்கி மற்றும் சட்டை அணிந்துள்ள அவர் நேற்று முன்தினம் இரவு அந்த வழியாக சென்றபோது வாகனம் மோதி உயிரிழந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த வழியாக வாகனங்களில் சென்றோர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் எஸ்.ஐ.கள் விஜயகுமார், சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்கு பதிந்து இறந்தவர் யார்? வாகனம் மோதி இறந்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.