ராஜபாளையம், ஆக.28: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரம் ஊராட்சிக்குட்பட்ட முதலியார் தெரு மற்ற பகுதிகளை விட தாழ்வான பகுதியாக இருந்து வருகிறது. இங்கு சாலையின் இரு புறமும் உள்ள வாறுகால் சுத்தம் செய்யாமல் இருப்பதன் காரணமாக லேசான மழைக்கு கழிவுநீர் அனைத்தும் சாலையில் தேங்கி வருகிறது. இது குறித்து பல ஆண்டுகளாக புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை என பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இப் பகுதியில் வழிபாடு ஸ்தலம், குழந்தைகள் மருத்துவமனை, அதன் அருகே பள்ளியும் செயல்பட்டு வருகிறது. தற்போது பெய்து வந்த லேசான மழைக்கே சாலையில் கழிவுநீர் சகதியாக தேங்கி தொற்று நோய் ஏற்படும் அபாயத்தில் இருந்து வருகிறது. எனவே அப்பகுதி மக்கள் தொற்று நோய் ஏற்படுவதற்கு முன் அகற்றப்பட வேண்டும். மேலும் இனிமேல் கழிவுநீர், சகதி தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.