காரைக்குடி, ஜூன் 17: காரைக்குடி அருகே சாக்கோட்டை வட்டாரத்தில் வேளாண்மைத்துறையின் வேளாண்மை மேலாண்மை முகமை திட்டத்தின் மூலம் வயல்விழா மற்றும் உலக சுற்றுச் சூழல் தினம் நடந்தது. சாக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சண்முக ஜெயந்தி தலைமை வகித்து பேசுகையில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் பெரியகோட்டை, ஆம்பக்குடி, பிரம்புவயல், கானாடுகாத்தான் மற்றும் வேங்காவயல் ஆகிய ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் தரிசு, புஞ்சை நிலங்களை தொகுப்பாக தேர்வு செய்து ஆழ்துறை கிணறு அமைத்து இலவச மின்சாரம் வழங்கி சொட்டு நீர்பாசனம் அமைத்து கொடுத்து மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆதிதிராவிட விவசாயிகளுக்கு தனியாக அவர்கள் புஞ்சை நிலங்களில் ஆழ்துளை கிணறு அமைக்க மானியம் வழங்கப்படுகிறது என்றார். உதவி வேளாண் அலுவலர்கள் சோலைராஜன், கார்த்திக் குமரன், தோட்டக்கலை அலுவலர் தாரணிகா, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை சார்பில் உதவி வேளாண்மை அலுவலர் காஷாமுகைதீன், அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர்கள் தமிழ்ச்செல்வி எஸ்தர், தங்கபாண்டியன், லட்சுமிபாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.