கராச்சி: முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தின் சுவைக்கு மயங்காதவர்கள் இல்லை. ஆனால், சர்க் கரை நோயாளிகளால் அதை தொட்டுப் பார்க்கக் கூட முடிவதில்லை. இதில், சர்க்கரை அளவு அதிகம் என்பதால் மருத்துவர்களும் தடா போட்டு விடுகிறார்கள். சர்க்கரை நோயாளிகளின் இந்த கவலையை உணர்ந்த பாகிஸ்தான் பண்ணையாளர், ‘சுகர் ப்ரீ’ மாம்பழத்தை விளைவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றியும் பெற்றுள்ளார். கராச்சியை சேர்ந்தவர் குலாம் சர்வார், 300 ஏக்கரில் பிரமாண்டமான இயற்கை விவசாயப் பண்ணையை பராமரித்து வருகிறார். இந்த பண்ணையில் 44 ரகத்தில் மாம்பழ வகைகள் விளைகின்றன. இங்கு மாம்பழம் தொடர்பான பல ஆராய்ச்சிகளையும் இவர் செய்கிறார். குறிப்பாக, ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் சொனரோ, க்ளென் மற்றும் கெய்ட், சிந்திரி, சவுன்சா மாம்பழங்களின் சர்க்கரை விகிதத்தை குறைக்கும் ஆராய்ச்சியில் தீவிரமாக இருந்தார். தீவிர முயற்சியின் பலனாக இவற்றில் சர்க்கரை அளவை மிகப்பெரும் அளவில் குறைத்து வெற்றி பெற்றுள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், ‘‘பொதுவாக மாம்பழங்களில் 12-25 சதவீத சர்க்கரை இருக்கும். இதனாலேயே நீரிழிவு நோயாளிகள் அதை சாப்பிட தயங்குகிறார்கள். ஆனால், எனது பண்ணைகளில் விளைவித்த மாம்பழத்தில் 4-6 சதவீத சர்க்கரை மட்டுமே இருக்கிறது. இவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மரங்களாகும்,’’ என்றார்….