திருச்சி, ஏப்.5: சமயபுரம், எஸ்.ஆர்.வி பள்ளியில் ‘மகிழ்ச்சியான கற்றல் கற்பித்தல்’ ஆசிரியர்களுக்கான 2 நாள் பயிற்சி பட்டறையில் கல்வியாளர் சாலை செல்வம் கலந்து கொண்டு ஆசிரியர்களிடம் பேசினார். கல்வி என்பது என்ன? என்ற கேள்வியோடு ஆசிரியர்களுடன் உரையாடல் துவங்கினார். குலக்கல்வியிலிருந்து மெக்கேலா கல்விக்கு நகர்ந்து இன்று அனைவருக்கும் கல்வி என்ற வகையில் கல்வி நகர்ந்திருக்கிறது.
அரசியலமைப்பு சாசனம் உறுதிப்படுத்த விரும்பும் சமத்துவம், சகோதரத்துவம், ஜனநாயகம் போன்ற கோட்பாடுகளை முன்னெடுத்து கல்வி அதன் நோக்கத்தை வடிவமைத்துள்ளது. கல்வியின் நோக்கங்களான அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல், கலை கலாச்சாரத்தை பாதுகாத்தல், மனிதபிமானத்துடன் இயங்குதல் என்று புரிந்துக் கொண்டு ஆசிரியர்கள் பாடத்திட்டத்திற்கு நகர வேண்டும்.
மாணவர்களுக்கு பிடித்த செய்தியை ஒன்றைத் தேர்வு செய்து அச்செய்தியின் மூலம் பாடத்திட்டத்துக்குள் நுழைந்து, கல்வியின் நோக்கத்தை எடுத்துச் செல்ல வேண்டும். வகுப்பறை ஜனநாயகத்தோடு இருப்பதும் மகிழ்ச்சியான கற்றலில் குழந்தைகளை ஈடுபடுத்துவதும்தான் ஆசிரியர்களின் கடமை. ஆசிரியர்கள் புதுமையான கற்றல் கற்பித்தலை புரிந்து கொள்வதும் அதற்கு புதுமையான வெவ்வேறு கற்றல் கற்பித்தல் உதாரணங்களை அனுபவமாகவும் வீடியோவாகவும் பார்க்க வேண்டும்.
ஒரு வகுப்பறையில் விதம் விதமான மாணவர்கள் இருப்பார்கள் அவர்கள் அனைவரும் ஒரே பாடத்தை புரிந்துகொள்ள வேண்டிய அவசியத்தை ஆசிரியர் புரிந்து கொள்ள வேண்டும் என்றார். இப்பயிற்சியில் தலைவர் ராமசாமி, செயலர் சுவாமிநாதன், பொருளர் செல்வராஜன், துணைத் தலைவர் குமரவேல், இணைச்செயலர் சத்தியமூர்த்தி, பள்ளி தலைமை செயல் அலுவலர் துளசிதாசன், தலைமையாசிரியர் பொற்செல்வி கலந்து கொண்டனர்.