கூடலூர், நவ. 10: கேரள மாநிலம், பத்தனம்திட்டாவில் இருந்து பம்பை வரை மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் நடத்திய பேரிடர் மேலாண்மை பாதுகாப்பு பயணத்தை, அந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் ஷிபு நேற்று முன்தினம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் இது குறித்து கலெக்டர் ஷிபு கூறுகையில், ‘சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு செய்யப்பட்ட ஏற்பாடுகள் என்ன, செய்ய வேண்டிய ஏற்பாடுகள் என்ன, இந்த விஷயங்கள் இந்த பயணத்தின் மூலம் மதிப்பிடப்படும்.
பேரிடர் மேலாண்மை பாதுகாப்பு பயணத்தில் அந்தந்த பகுதிகளில் உள்ள அனைத்து துறைகளின் தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்று ஏற்பாடுகளை மதிப்பீடு செய்து தேவையான ஆலோசனை வழங்குவர். பத்தனம்திட்டா, வடசேரிகரை, வடசேரிகரை மகாவிஷ்ணு கோயில், வடசேரிகரை கடவு, வடசேரிகரை சாலையில் உள்ள உணவுக்கடைகள், மாடமன் ரிஷிகேஷ் கோவில் கடவு, அத்திக்காயம் கடவு, விளக்குவஞ்சி லாகா வளைவு, இலவுங்கல் வனத்துறை அலுவலகம், நிலக்கல், அட்டத்தோடு, சாலக்கயம், பம்பை முதலிய இடங்களில் இந்த யாத்திரை செல்லும்.
வழிகாட்டி பலகைகள், கழிவறை, பார்க்கிங் வசதி போன்றவற்றை மதிப்பீடு செய்து இக்குழு அதிகாரிகளுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கும். சபரிமலை யாத்திரை தொடங்கும் முன் பக்தர்களுக்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு பெறும்’ என்றார். நிகழ்ச்சியில், மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணைய துணை ஆட்சியர் டி.ஜி.கோபகுமார், மாவட்ட மருத்துவ அலுவலர் (சுகாதாரம்) டாக்டர் அனிதாகுமாரி, மாவட்ட தகவல் அலுவலர் காந்த் எம் கிரிநாத், ஆய்வாளர் சாந்தினி பி சேனன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.