புதுச்சேரி, நவ. 10: புதுச்சேரியில் நடந்த அதிமுக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், காலாப்பட்டு மருந்து தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டு 14 பேர் படுகாயமடைந்துள்ளனர். விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், பாஜக கூட்டணி அரசு வாய் மூடி மவுனமாக உள்ளதால் மக்கள் அதிருப்பதியில் உள்ளனர். அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி விரோத செயல்களில் ஓபிஎஸ் ஈடுபட்டதால் அவர் கட்சி கொடியையும் சின்னத்தையும் பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே அவர் அதிமுக கரை வேட்டி கட்டும் தகுதியை இழந்துவிட்டார். அதிமுக லெட்டர் பேடையும் பயன்படுத்தக்கூடாது, சின்னத்தையும் எங்கும் வரையக்கூடாது. அதிமுகவுக்கு எதிரியாக, துரோகியாக இருக்கும் நபர்களுக்கு இந்த தீர்ப்பு ஒரு பாடமாக உள்ளது. பொதுமக்களின் மனநிலை பாஜகவின் கூட்டணி தேவையில்லை என்பதுதான். அந்த அடிப்படையில் எடப்பாடி பழனிச்சாமி இதனை தெளிவுபடுத்தி முடிவெடுத்துள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்றத்தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது. முடிந்த கதை என்றும் தொடர்வதில்லை. ஓபிஎஸ் வாய்ப்பாட்டு பாடி கொண்டிருப்பார் அதற்கெல்லாம் நான் பதில் சொல்ல தேவையில்லை. சசிகலாவும் கட்சியின் கொடியையோ, லட்டர் பேடையோ, சின்னத்தையோ பயன்படுத்தக் கூடாது இதற்கான வழக்கு கோர்ட்டில் உள்ளது, என்றார்.