கரூர், டிச. 21: சணப்பிரட்டி ரயில்வே குகை வழிப்பாதையில் தண்ணீர் தேங்கி நிற்பதை விரைந்து சரி செய்ய வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். கரூர் திருச்சி இடையே ரயில்வே தண்டவாளம் சணப்பிரட்டி அருகே செல்கிறது. கரூரில் இருந்து கோயம்பள்ளி, சணப்பிரட்டி போன்ற பல்வேறு பகுதிகளுக்கு இந்த பகுதியின் வழியாக அதிகளவு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. அடிக்கடி ரயில் குறுக்கீடு காரணமாக, வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்ட நிலையில், சணப்பிரட்டி அருகே குகை வழிப்பாதை அமைக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் இருநது கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு குகை வழிப்பாதை அமைத்து தரப்பட்டது. மழை பெய்யும் காலங்களில் குகை வழிப்பாதையின் உட்புறம் அவ்வப்போது தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகளுக்கு பெரிதும் இடையூறாக உள்ளது எனக் கூறப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த குகை வழிப்பாதையை பார்வையிட்டு, தண்ணீர் தேங்காத வகையில் தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் வாகனஓட்டிகள், மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.