காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு தேவையான மின்னணு வாக்கு எண்ணிக்கை இயந்திரங்கள் (கன்ட்ரோல் யூனிட்) மின்னணு வாக்கு இயந்திரங்கள் (பேலட் யூனிட்) மற்றும் வாக்காளர்கள் எந்த வேட்பாளருக்கு வாக்கு அளித்தனர் என்ற விவரம் காட்டும் கருவி (விவிபிஏடி) ஆகிய இயந்திரங்கள் காஞ்சிபுரம் நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில், 2021 சட்டமன்ற தேர்தல் பணிக்காக, காஞ்சிபுரம் அரசு சேமிப்பு கிடங்கில் இருந்த இயந்திரங்களை அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் திறந்து காஞ்சிபுரம், உத்திரமேரூர், பெரும்புதூர், ஆலந்தூர் ஆகிய தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணியை கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தொடங்கி வைத்தார்.அதன்படி, ஆலந்தூர் தொகுதியில் 565 வாக்குச்சாவடிகளுக்கு 678 வாக்கு எண்ணிக்கை இயந்திரங்கள் (கன்ட்ரோல் யூனிட்) 678 மின்னணு வாக்கு இயந்திரங்கள் (பேலட் யூனிட்) மற்றும் வாக்காளர்கள் எந்த வேட்பாளருக்கு வாக்கு அளித்தனர் என்ற விவரம் காட்டும் கருவி (விவிபிஏடி) 729, ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு 612 கன்ட்ரோல் யூனிட், பேலட் யூனிட் 612. விவிபிஏடி 661 அனுப்பப்பட்டது. உத்திரமேரூர் தொகுதிக்கு 431 கன்ட்ரோல் யூனிட், 431 பேலட் யூனிட், 463 விவிபிஏடியும், காஞ்சிபுரம் தொகுதிக்கு 524 கன்ட்ரோல் யூனிட், 524 பேலட் யூனிட், 563 விவிபிஏடியும் அனுப்பி வைக்கும் பணி நேற்று தொடங்கியது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், திமுக எம்எல்ஏ எழிலரசன், நகர செயலாளர் சன் பிராண்டு ஆறுமுகம், ஜெகநாதன், அபுசாலி, பாஜக ஓம்சக்தி பெருமாள் உள்பட அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்….