கோவை, டிச. 9: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்படும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கோவை கோட்டத்திற்கு உட்பட்ட கோவை, உதகை, ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய 4 மண்டலங்களுக்கு நடப்பாண்டில் 226 பேருந்துகள் புதுப்பிக்க தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி, புதுப்பிக்க ஒதுக்கீடு செய்யப்பட்ட பேருந்துகளில் முதற்கட்டமாக 4 பேருந்துகள் பணி முடிந்து நேற்று முதல் இயக்கப்பட்டது.
மஞ்சள் நிறத்திலான இந்த பேருந்துகள் கோவையில் இருந்து தேனி, நாமக்கல், திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டன. இதனை தொடர்ந்து வரும் 11-ம் தேதி முதல் மேலும் 5 மஞ்சள் நிற பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மீதமுள்ள பேருந்துகளின் கூண்டு கட்டுமான பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், 36 பேருந்துகள் இம்மாத இறுதிக்குள் பணிகள் முடிக்கப்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் என கோவை கோட்ட போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார்.