வத்திராயிருப்பு, மே 1: தமிழகத்தில் கோடை வெயில் துவங்கி வாட்டி வதைத்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி கடுமையான வெயில் அடித்து வருவதால் பொதுமக்கள் சிரமத்தை சந்தித்து விடுகின்றனர். விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரையிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கூமாப்பட்டி, தம்பிபட்டி, கான்சாபுரம், கோட்டையூர், மகாராஜபுரம், பிளவக்கல் அணை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 15 நிமிடம் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு மழை பெய்தது.
இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த மழை தொடர்ந்து நீடிக்காததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இருந்த போதிலும் மழையால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து இதமான சூழல் நிலவியதால் பொதுமக்கள் நிம்மதியுடன் உறங்கினர். இதேபோல் நேற்று மாலையும் சுமார் அரை மணிநேரம் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.